தமிழ்நாடு

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்க உத்தரவிட்டுள்ளது

ராம் அப்பண்ணசாமி

அரசுப் பணிகளில் சேர பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீடு முறையை மாற்றக் கோரி கடந்த சில நாட்களாக வங்கதேச நாட்டில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள தமிழர்களுக்கு உதவ தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் சுருக்கம் பின்வருமாறு:

வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருக்கும் தகவல்கள் வரப்பெற்றுள்ளன. வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், வெளி நடமாட்டத்தைக் குறைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தை வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்படும் நிலையில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் பின்வரும் கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

+91 1800 309 3793, +91 80 6900 9900, + 91 80 6900 9901