தில்லியில் இருக்கும் பிக் பாஸ் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடும் நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.
திருச்சியில் திமுக நிர்வாகி பழனியாண்டியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-
“எப்போது இயங்கிக் கொண்டே இருப்பதனால் தான் இதை இயக்கம் என்கிறோம். எதிரிகள் புது புது உத்திகளோடு நம்மை தாக்குவதற்கு, நம்மை அழிப்பதற்கு ஒழிப்பதற்கு புது புது முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார்கள். வருமான வரிையை அனுப்பி விட்டார்கள். அதற்கு பிறகு பல்வேறு சிபிஐ என்றெல்லாம் சொல்லி பல்வேறு குற்றப் புலனாய்வுத் துறை மூலமாக பலப் பல ஆயுதங்களை எல்லாம் எடுத்து நம்மை மிரட்டிப் பார்த்தார்கள். இப்போது சிறப்பு தீவிர திருத்தம் என்ற ஆயுதத்தின் மூலம்தான் திமுகவை அழிக்க முடியும் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இது வேறு மாநிலங்களில் எடுபடலாமே தவிர, தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
நாளை (நவ. 11) சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக நாம் போராட்டம் நடத்தப் போகும் நிலையில், அன்றைக்கே உச்ச நீதிமன்றம் நமது வழக்கை விசாரிக்க இருக்கிறது. திருச்சி வந்தவுடன் தான் எனக்கு செய்தி கிடைத்தது. திமுக போட்டிருக்கும் வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக உச்ச நீதிமன்றத்தில் திடீரென்று மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்கள். உங்களுக்கு உள்ளபடியே அக்கறை இருந்திருந்தால் எதிர்ப்பைத் தெரிவித்திருக்க வேண்டும். எங்களுக்கு முன்னாலேயே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் இப்போது திடீரென்று திமுக வழக்கில் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அதிமுக கேட்டுள்ளது.
இன்று பாஜகவோ தேர்தல் ஆணையமோ எதைச் சொன்னாலும் ஆதரிக்கின்ற நிலையில்தான் அதிமுக இருக்கிறது. தில்லியில் இருக்கும் பிக் பாஸுக்கு எடப்பாடி பழனிசாமி ஆமாம் சாமி போட்டுத்தான் ஆக வேண்டும். அதுதான் உண்மை அதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.
Chief Minister M.K. Stalin criticized that Edappadi Palaniswami is in a position where he says "yes, sir" to whatever Big Boss in Delhi says.