தமிழ்நாடு

அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்

ராம் அப்பண்ணசாமி

அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளியில் இன்று (ஜூலை 15), முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை திட்டத்தைத் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

திட்டத்தை தொடங்கி வைக்கும் முன்பு புனித அன்னாள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் ஸ்டாலின். இன்று முன்னாள் முதல்வர் காமராஜின் 122-வது பிறந்தநாள். ஒவ்வொரு வருடமும் காமராஜின் பிறந்தநாள் தமிழக அரசால் மாநில கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

2022 செப்டம்பர் 15 முதல் அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. இந்நிலையில் இன்று முதல் அரசு உதவி பெரும் தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

புனித அன்னாள் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், குழந்தைகளுக்கு காலை உணவைப் பரிமாறினார். பிறகு அவர்களுடன் அமர்ந்து காலை உணவருந்தினார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 30,992 அரசுத் தொடக்கப் பள்ளிகளில், 18 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இன்றிலிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 2,23,536 தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயனடைவார்கள்.