பேரனை கொலை செய்த தாத்தா 
தமிழ்நாடு

மூடநம்பிக்கையால் ஏற்பட்ட கொடூரம்: பேரனைக் கொலைச் செய்த தாத்தா

யோகேஷ் குமார்

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன ஆண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வசித்து வந்தவர் வீரமுத்து. இவரது மகள் சங்கீதாவுக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஜூன் 14 அன்று அதிகாலையில் அருகிலிருந்த குழந்தையை காணவில்லை என்பதால் அந்த குழந்தையின் தாய் அதிர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து அந்த குழந்தையின் தாய், தாத்தா, பாட்டி மற்றும் பெரியம்மா என அனைவரும் குழந்தையைத் தேடியுள்ளனர். அப்போது அந்த குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் போர்வையுடன் மூழ்கடிக்கப்பட்டு இறந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இச்சம்பவம் தொடர்பாக ஜெயங்கொண்டம் காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து குழந்தையின் குடும்பத்தினரை விசாரித்ததில் மூடநம்பிக்கையில் அந்த குழந்தையை தாத்தாவே கொன்றது தெரியவந்துள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால், தனது உயிருக்கு ஆபத்து என்றும் கடன் பிரச்னை அதிகரிக்கும் என்றும் எண்ணி மூடநம்பிக்கையில் கொலை செய்துவிட்டு, நாடகமாடியுள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குழந்தையைத் தண்ணீர் பேரலில் மூழ்கடித்துக் கொடூரமாக கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.