இளைஞர் எடுத்து விபரீத முடிவு! 
தமிழ்நாடு

டிஎன்பிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

யோகேஷ் குமார்

டிஎன்பிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் ராஜ். இவர் நேற்று கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில், போரூர் வழியாக செல்லும் வளைவில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனைக் கண்ட மக்கள் உடனடியாக பரங்கிமலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சாமுவேல் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கெனவே உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை மேற்கொண்ட காவல் துறையினர், இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎல் போட்டியில் வாய்ப்பு கிடைக்காததால் கடந்த சில நாட்களாகவே வருத்தமாக இருந்த அந்த இளைஞர் இதுபோன்ற விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இணைய வேண்டும் என்பதற்காக சாமுவேல் ராஜ் கடந்த சில வருடங்களாகப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். எம்பிஏ படித்த இவர், கடந்த ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புச்சி பாபு போட்டியில் விளையாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

(தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சுகாதாரத் துறையின் உதவி எண்ணை அழைக்கலாம் - 104)