தமிழ்நாடு

கரூர் துயரம்: வதந்தி பரப்பிய 25 கணக்குகள் மீது வழக்கு | Karur Stampede |

வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக வதந்தி பதிவுகளை வெளியிட்டதாக 25 சமூக ஊடகக் கணக்காளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரையின்போது கூட்டநெரிசல் ஏற்பட்டதில் பலருக்கு மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதில் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மேலும், சம்பவம் குறித்து தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “சமூக ஊடகங்களில் சிலர் பரப்பும் வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்த ஓர் அரசியல் கட்சித் தலைவரும் தன்னுடைய தொண்டர்களும் அப்பாவி பொதுமக்களும் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் அவர்கள் நம் தமிழ் உறவுகள். எனவே சோகமும் துயரமும் சூழ்ந்திருக்கக்கூடிய நிலையில் பொறுப்பற்ற வகையில் விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”

என்று கூறியிருந்தார். இந்நிலையில், வதந்திகளைப் பரப்பிய 25 சமூக ஊடகக் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சமூக வலைத்தளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வதந்தி பரப்பிய குற்றச்சாட்டுக்காக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.