தமிழ்நாடு

எஸ்.வி. சேகருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உறுதி: சென்னை உயர் நீதிமன்றம்

எஸ்.வி. சேகருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டிருந்தார் நீதிபதி ஜெயவேல்.

ராம் அப்பண்ணசாமி

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கில், எஸ்.வி. சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறை தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

கடந்த 2018-ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்துத் தரக்குறைவாக விமர்சித்துத் தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எஸ்.வி. சேகர். இந்த விவகாரத்தில் எஸ்.வி. சேகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் செயலாளர் மிதார் மொய்தின் புகாரளித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எஸ்.வி. சேகர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயவேல் முன்னிலையில் நடைபெற்றது.

வழக்கு விசாரணையின் முடிவடைந்து, கடந்த பிப்ரவரி 19-ல் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும், ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி ஜெயவேல்.

இதைத் தொடர்ந்து, சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக எஸ்.வி. சேகரின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஜெயவேல். இதனை அடுத்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் எஸ்.வி. சேகர்.

இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், எஸ்.வி. சேகர் தரப்பு மற்றும் எதிர்தரப்பு வாதங்களை கேட்ட பிறகு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம், எஸ்.வி. சேகருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த ஒரு மாத சிறை தண்டனை உறுதியாகியுள்ளது.