கார் விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு! 
தமிழ்நாடு

கார் ஓட்டிப் பழகும் போது விபத்து: இரு சிறுவர்கள் உயிரிழப்பு!

யோகேஷ் குமார்

பரமத்தி வேலூர் அருகே இரு சிறுவர்கள் ஓட்டி வந்த கார் விபத்துக்குள்ளான நிலையில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், கபிலர்மலை அருகே பெரிய மருதூர் பகுதியை சேர்ந்த ராமசாமியின் மகன் லோகேஷ் (17) மற்றும் ராமசாமியின் நெருங்கிய உறவினர் ரமேஷின் மகன் சுதர்சன் (14) ஆகிய இருவரும் காரை எடுத்துக்கொண்டு நேற்று இரவு பரமத்தி பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் கபிலர்மலைக்குச் செல்ல ஜேடர்பாளையம் சாலையில் சென்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் அதே சமயத்தில் எதிரே வந்த காரும் சிறுவர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதியதில் லோகேஷ் மற்றும் சுதர்சன் ஆகிய இரு சிறுவர்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் ஓட்டிப் பழகும் போது இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.