கோப்புப் படம் ANI
தமிழ்நாடு

பற்றி எரியும் இருசக்கர வாகனங்கள்: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

யோகேஷ் குமார்

இருசக்கர வாகன உரிமையாளர்கள், வாகனங்களில் தேவையின்றி மாற்றங்கள் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தானாக தீப்பிடித்து சேதம் அடைந்து வரும் நிலையில் இது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் ஆய்வு மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி அல்லது எல்பிஜி மாற்றங்கள் செய்யக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத சிஎன்ஜி அல்லது எல்பிஜி மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்குள்ளாகிறது. வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.