தமிழ்நாடு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் விசாரணை தொடக்கம்: என்ன சொல்கிறார் அஸ்ரா கர்க்? | Karur Stampede |

"சிறப்பு விசாரணைக் குழுவில் என்னைத் தவிர இரு காவல் துறை கண்காணிப்பாளர்கள், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்..."

கிழக்கு நியூஸ்

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு வேலுச்சாமிபுரத்தில் இன்று விசாரணையைத் தொடங்கியது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட 41 பேர் உயிரிழந்தார்கள். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். மதியழகன் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த வாரம் தனது விசாரணையைத் தொடங்கினார்.

இதனிடையே, சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பவரால் கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுபோன்ற நிகழ்வுகளை நடத்த நிலையான செயல்முறைகள் வகுக்கப்பட வேண்டும் என உள்துறைச் செயலர் மற்றும் காவல் துறை இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். செந்தில்குமார் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். விசாரணையை உடனடியாகத் தொடங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கரூர் சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில் சிறப்பு விசாரணைக் குழுவில் கூடுதலாக சில காவலர்கள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. வழக்கை விசாரித்து வந்த கரூர் நகர காவல் துறையினர், வழக்கு குறித்த ஆவணங்கள் அனைத்தையும் சிறப்பு விசாரணைக் குழுவிடம் சனிக்கிழமை ஒப்படைத்தன. இதைத் தொடர்ந்து, அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆயுவ் மேற்கொண்டார்கள். சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அடுத்ததாக விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அஸ்ரா கர்க் கூறியதாவது:

"உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று தான் நாங்கள் முறையாக விசாரணையைத் தொடங்கியுள்ளோம். எனவே, வழக்கு குறித்து தற்போதைக்கு எதுவும் கூற முடியாது. சம்பவ இடத்துக்கு இன்று தான் வந்துள்ளோம்.

சிறப்பு விசாரணைக் குழுவில் என்னைத் தவிர இரு காவல் துறை கண்காணிப்பாளர்கள், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், இரு காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 5 காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் உள்ளார்கள். இதற்கு மேல் தற்போது எதுவும் கூற முடியாது" என்றார் அஸ்ரா கர்க்.

Karur Stampede | Asra Garg | SIT | Madras High Court |