தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் கோரிய வழக்கு: காலை 10.30-க்கு ஒத்திவைப்பு

கட்சி அலுவலகத்துக்கு அருகே பொது மக்கள் அதிகமாக வசிப்பதால் அங்கே அடக்கம் செய்தால் வருங்காலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது

ராம் அப்பண்ணசாமி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூன் 5-ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். இதை அடுத்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி அவரது மனைவி பொற்கொடி நேற்று உயர் நீதிமன்றத்தில் ரீட் மனு தாக்கல் செய்தார்.

பல வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தார் ஆம்ஸ்ட்ராங். எனவே அவரது உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அனுமதி தர வேண்டும் என்று ரீட் மனுவில் குறிப்படப்பட்டிருந்தது. இந்த ரீட் மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு மனு மீதான விசாரணையை இன்று காலை 8.30 மணி அளவில் தொடங்கினார் உயர் நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன்.

`இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் மாநகராட்சியிடம் வைத்த கோரிக்கைக்கு பதில் இல்லாததால் ரீட் மனுவை தாக்கல் செய்துள்ளோம். பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அடக்கம் செய்ய அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை, எனவே நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்க வேண்டும்’ என்று வாதிட்டார் பொற்கொடி தரப்பு வழக்கறிஞர்.

`கட்சி அலுவலகம் அமைந்துள்ள பெரம்பூர் 16 அடி சாலை குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைந்துள்ள நெருக்கடியான பகுதி. கட்சி அலுவலகத்துக்கு அருகே பொது மக்கள் அதிகமாக வசிப்பதால் அங்கே அடக்கம் செய்தால் வருங்காலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அங்கிருந்து 1.5 கி.மீ தூரத்தில் அரசு தேர்தெடுத்துள்ள வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கலாம்’ என்று தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தன் வாதத்தை முன்வைத்தார்.

மேலும் கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நெரிசல் மிகுந்த பகுதி என்பதை நிரூபிக்க வரைபடங்களைச் சமர்பித்தது தமிழக அரசு.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதி பவானி சுப்பராயன், `சட்டப்படி குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்ய முடியாது. மயானம் என்று அறிவிக்கப்பட்ட பகுதியில் தான் அடக்கம் செய்ய முடியும். 200 சதுர அடி நிலத்தை வழங்க அரசு முன்வந்துள்ளது. அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்.

நீதிபதியாக அல்லாமல் சகோதரியாக சொல்கிறேன். பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நான் உத்தரவு பிறப்பிக்கிறேன்’ என்று கூறி வழக்கை 10.30 மணிக்கு ஒத்தி வைத்தார்.