தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்புச் சட்டம்: அரசாணை வெளியீடு!

ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும்

யோகேஷ் குமார்

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால், அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு வாங்குவோரின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக, 1994-ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பல்வேறு பிரிவுகள், தற்போதைய சூழலுக்கு போதுமானதாக இல்லை.

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை 2022-ல் தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு, 2023-ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தாலும், விதிகள் வகுக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கான விதிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடு குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் சொசைட்டி அல்லது சங்கம் ஒன்றை நிறுவி, அதை பதிவு செய்ய வேண்டும்.

இதைத் தொடர்ந்து சங்கத்திற்கான துணைவிதிகளை உருவாக்க வேண்டும். ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு உரிமையாளர்கள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாகக் குழுவை நியமிக்க வேண்டும். நிர்வாக குழு சங்கத்தின் சொத்துக்களின் ஒட்டுமொத்த மேலாண்மை, பொதுவான பகுதிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொதுவான பகுதிகள் மற்றும் வசதிகள் ஆகியவற்றின் செயல்பாடு மற்றும் மேலாண்மை ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

ஒரு சொத்தில் பல குடியிருப்புகள் இருந்தால், சம்பந்தப்பட்ட சங்கங்கள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம். கூட்டமைப்பின் தலைவர் கூட்டமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார்.பாதிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட திட்டமிடல் ஆணையத்தின் முன் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்கலாம்.

கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக திட்டமிடல் அதிகாரிகள் சான்றளித்தால், விரிவான மறுவடிவமைப்பு அறிக்கையைத் தயாரிக்க சங்கங்கள் அனுமதிக்கப்படும். மறுவடிவமைப்புத் திட்டம் முடிந்ததும், கட்டிடத்தை காலி செய்யுமாறு உரிமையாளர்களுக்கு சங்கம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். யாரேனும் ஒருவர் வெளியேற மறுத்தால், அந்த நபரை காவல் துறை பாதுகாப்புடன் சங்கம் வெளியேற்றலாம்.

இந்த விதிகளின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான இணையதளத்தை சம்பந்தப்பட்ட துறை உருவாக்க வேண்டும். இந்த விதிகளை செயல்படுத்தும் அதிகாரிகளாக பதிவுத்துறையின் அந்தந்த மாவட்ட பதிவாளர்கள் செயல்படுவார்கள். துணை பதிவுத்துறை தலைவர்கள் மேல்முறையீட்டு அதிகாரிகளாக செயல்படுவார்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.