தமிழ்நாடு

தில்லி அரசியலில் விருப்பம் இல்லை: அண்ணாமலை உறுதி

கிழக்கு நியூஸ்

தில்லி அரசியலில் விருப்பம் இல்லை எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கோவையில் போட்டியிடும் அண்ணாமலை, கோவைக்கு இன்று வருகை தந்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தலில் கோவையில் பாஜக நிச்சயம் வெல்லும். தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். தில்லி அரசியலில் எனக்கு விருப்பம் இல்லை. தமிழக அரசியலில் தான் நான் இருப்பேன். பிரதமர் மோடியின் விருப்பத்தினாலே கோவையில் நான் போட்டியிடுகிறேன். மோடியின் உத்தரவுக்கு நான் கட்டுப்பட்டவன். தமிழக முதல்வர் கோவையில் 40 நாள்கள் பிரசாரம் செய்தாலும் அனைத்து அமைச்சர்களும் வந்தாலும் சரித்திர எண்ணிக்கை வித்தியாசத்தில் பாஜக வெல்லும். பிரதமர் தமிழகத்துக்கு அடிக்கடி வருவது 2026-ல் பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் வெல்லும் பாஜக எம்.பி.க்கள் சிறப்பாகப் பணியாற்றி அதன்மூலம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடிக்கும். தேர்தல் தேதி அறிவித்த பிறகும் அரசுமுறைப் பயணமாக பூடானுக்குப் பிரதமர் சென்றிருக்கிறார். வேறு எந்தப் பிரதமராவது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்களா என்றார்.