திருத்தணியில் புலம்பெயர்ந்த தொழிலாளரைத் தொடர்ந்து மற்றொரு நபரும் இளைஞர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசைக் குற்றம்சாட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருத்தணி அருகே சுராஜ் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி மீது சிறுவர்கள் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து அதில் தொடர்புடைய சிறுவர்கள் நான்கு பேரைக் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. காயமடைந்தவர் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினரால் விடுவிக்கபட்டுள்ளார்.
வியாபாரி மீது தாக்குதல்
இச்சம்பவத்தின் அதிர்ச்சி தணிவதற்கு முன்பே திருத்தணி ரயில் நிலையத்தில் வைத்து வியாபாரி ஒருவரை இளைஞர்கள் தாக்கும் காணொளி வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரயில் நிலைய நடைமேடையில் வைத்து அவரை இளைஞர்கள் சரமாரியாகத் தாக்குவது அந்தக் காணொளியில் பதிவாகியுள்ளது. இது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், திருத்தணி சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களில் குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கமளித்து வருவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
“திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வட மாநில இளைஞர் சுராஜ் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறாத நிலையில், திருத்தணியில் நேற்று மற்றொரு வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜமால் என்ற உள்ளூர் தொழிலதிபர், எந்தவித காரணமும் இன்றி ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இது இனி ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இது ஒரு கவலைக்குரிய போக்காக மாறியுள்ளது.
அரசின் மீது குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. சமூக விரோதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அரசு ஊக்கம் அளிக்கிறது. சாதாரண குடிமக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியின் கீழ், பொதுப் பாதுகாப்பு சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் தனது முழுமையான தோல்வியை திமுக ஒப்புக்கொள்வதற்கு முன்பு, இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிப் பதிவிட்டுள்ளார்.
Former BJP state president Annamalai has condemned the incident in which another person was attacked by youths after a migrant worker in Tiruttani.