தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

விவாகரத்து கோரி விஜயின் மனைவி சங்கீதா மனு | TVK Vijay |

வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயன்றும் அவர் மறுத்துவிட்டார்...

கிழக்கு நியூஸ்

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சி மூலம் தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் விஜய்.

விஜய்க்கு அடுத்தடுத்து பிரச்னைகள்

கட்சி தொடங்கியதை அடுத்து, முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக விஜய் அறிவித்திருந்தார். அதன்படி அவர் நடித்த கடைசி படம் ஜனநாயகன், அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பைப் பெற்றிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி ஜனவரி 9 அன்று படம் வெளியாகாமல், தணிக்கை சான்றிதழ் வழக்குகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதற்கிடையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் எதிர்பாராதவிதமாக 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கு, சிபிஐ விசாரணையில் இருக்கும் நிலையில், விஜய் தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அவ்வப்போது ஆஜராகி வருகிறார். இந்நிலையில், அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பிரிந்து வாழ்ந்த விஜய் - சங்கீதா

நடிகர் விஜய், கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது நிச்சயதார்த்தம் லண்டனிலும் திருமணம் சென்னையிலும் நடந்தது. இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். மகன் சஞ்சய், கனடாவில் திரைத்துறை சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, தற்போது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். மகள் திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். திருமணம் ஆகி 25 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த விஜய் - சங்கீதா ஜோடி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து கோரி சங்கீதா மனு

இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“விஜய் நடிகை ஒருவருடன் திருமணம் கடந்த உறவில் இருந்தது, கடந்த 2021 ஏப்ரலில் எனக்கு தெரிய வந்தது. அதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேண். மேலும் இது எங்கள் திருமணத்தின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குறி ஆக்கியது. இதைப்பற்றி கேட்டதற்கு அந்த உறவை விரைவில் முடித்துக் கொள்வதாக விஜய் கூறினார். ஆனால் அது தொடர்ந்து. இதனால் நான் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானேன். செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022-க்கு இடையில் வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முயன்றும் அவர் மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு எப்போது விசாரணை?

முன்னதாக பிப்ரவரி 24 அன்று செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனு, தற்போது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 20 அன்று விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து விஜய் இந்த வழக்கில் நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Actor Vijay's Wife Sankgeetha files divorce in Chengalpattu Family court, expected to be heard on April 20.