தமிழ்நாடு

ஓட்டுநர் உரிமம் பெற பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு!

ராம் அப்பண்ணசாமி

மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்க்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவிப்பு.

தகுதி வாய்ந்த மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெறாமல், போலி மருத்துவர்களிடம் சான்றிதல்கள் பெற்று அது மூலம் பலர் ஓட்டுநர் உரிமம் பெற்று வந்த நிலையில், தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் பெற உபயோகப்படுத்தப்படும் `சாரதி பரிவாஹன்’ மென்பொருளில் இதை முன்வைத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு அறிவிப்பு.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவச் சான்றிதழை மின்ணணு வாயிலாக மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும்.

`மருத்துவர்கள் தங்களது விவரங்களை முதலில் உள்ளீடு செய்து தங்களுக்கான சாரதி மென்பொருளில் ஒரு முறை உறுதி செய்துகொண்டால், அவர்கள் தொடர்ந்து விண்ணப்பதார்ர்களுக்கான மருத்துவச் சான்றினை சாரதி மென்பொருளில் பதிவேற்றம் செய்ய முடியும்’ எனவும் அரசு தகவல்.

இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்து ஜூன் 11-ல் காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மூலம் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.