கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு @PTI_News
தமிழ்நாடு

மதுரை: கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

மதுரையில் நடந்த கார் விபத்தில் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்றதாகக் கூறப்படுகிறது. திருவிழா முடிந்தவுடன் இன்று காலை தளவாய்புரத்திலிருந்து மதுரையை நோக்கி வந்ததாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து திருமங்கலம் சிவரக்கோட்டை நான்கு வழிச்சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக கொய்யாப்பழ வியாபாரி பாண்டி என்பவர் சாலை ஓரமாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இந்நிலையில் காரில் வந்து கொண்டிருந்த கனகவேல் இருசக்கர வாகனம் மீது மோதிவிடக்கூடாது என்பதால் காரை கட்டுப்படுத்த முயற்சி செய்ததாகத் தெரிகிறது. ஆனால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் அந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதியது. இதனால் கார் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் காரில் இருந்த ஒரு குழந்தை, கனகவேல் மற்றும் அவரது மனைவி, அவர்களின் உறவினர் ஒருவர் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் சாலையோரமாக சென்று கொண்டிருந்த கொய்யாப்பழ வியாபாரி பாண்டியும் உயிரிழந்துள்ளார்.

இதன் பிறகு இந்த விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.