சென்னையில், பயணிகள் வசதிக்காக 4 புதிய மின்சார ரயில் சேவைகள் இன்று (மார்ச் 3) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில், சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு/காஞ்சிபுரம், சென்னை சென்ட்ரல் புறநகர் - அரக்கோணம், சென்ட்ரல் சென்ட்ரல் புறநகர் – கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - வேளச்சேரி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 650-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் இந்த மின்சார ரயில்களில் சுமார் 10 லட்சம் பயணிகள் பயணிக்கின்றார்கள். பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், அவ்வப்போது புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்படும். அந்த வகையில், இன்று 4 புதிய மின்சார ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் வழித்தடத்தில் இரு மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, ஆவடியில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரல் செல்லும் ஒரு மின்சார ரயிலும் (43006), சென்னை சென்ட்ரலில் இருந்து முற்பகல் 11.15 மணிக்கு கிளம்பி ஆவடி செல்லும் ஒரு மின்சார ரயிலும் (43013) பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இரு மின்சார ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரல் இடையே காலை 9.10 மணிக்கு ஒரு ரயிலும் (42014), சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இரவு 10.35 மணிக்கு ஒரு மின்சார ரயிலும் (42035) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.