தமிழ்நாடு

கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு 20% தீபாவளி போனஸ் | Diwali Bonus |

சுமார் 5,308 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்று அறிவிப்பு...

கிழக்கு நியூஸ்

தமிழகத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20% ஊதியத்தை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் 5,308 தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2024-2025 ஆண்டிற்கான போனஸ் மற்றும் மற்றும் கருணை தொகை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

“கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு. 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும். சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதலமைச்சர் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில் சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி II ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும். மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணைத் தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5,308 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.353.37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.