தமிழ்நாடு

விசிக மது ஒழிப்பு மாநாடு: 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராம் அப்பண்ணசாமி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில், இன்று (அக்.2) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் 12 தீர்மானங்களை முன்மொழிந்து அவை மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தீர்மானங்கள் பின்வருமாறு:

1) அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-ல் கூறியுள்ளவாறு மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவித்து இந்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

2) மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட இந்திய அரசு முன்வர வேண்டும்.

3) மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு இந்திய அரசு கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்.

4) மதுவால் பாதிக்கப்படும் தேசிய மனிதவளத்தை மதிப்பீடு செய்வதற்கு ஏதுவாக மதுவிலக்கு விசாரணை ஆணையத்தை இந்திய அரசு அமைத்திட வேண்டும்.

5) தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக மதுபானக்கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும்.

6) தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

7) மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பு இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கவேண்டும். அதில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்.

8) குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சை அளிக்க தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை அமைக்க வேண்டும்.

9) மது போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.

10) டாஸ்மாக் என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மாற்று வேலை வழங்கிட வேண்டும்.

11) மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்கவும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிடவும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு அளித்திடவும் இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

12) மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்புக்கான பரப்பு இயக்கத்தில் அனைத்து அரசு சாரா அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும், சமூகப் பண்பாட்டு இயக்கங்களும் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள முன்வரவேண்டும்.