மூன்று பெண் மாணவர்கள் 499/500 எடுத்து சாதனை 
தமிழ்நாடு

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மூன்று பெண் மாணவர்கள் 499/500 எடுத்து சாதனை

யோகேஷ் குமார்

10-ம் வகுப்பு தேர்வில் மூன்று பெண் மாணவர்கள் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 9.08 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இதன் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகின. தமிழ்நாட்டில் 91.55 சதவீதம் பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

தேர்வெழுதிய பெண் மாணவர்களில் 94.53 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். வழக்கம்போல ஆண் மாணவர்களைவிட 5.95 சதவீதம் கூடுதலாக பெண் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். தேர்வெழுதியவர்களில் 88.58 சதவீத ஆண் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

கணிதத்தில் அதிகபட்சமாக 20,691 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்து அசத்தியுள்ளனர். தமிழில் 8, ஆங்கிலத்தில் 414, அறிவியலில் 5104 மற்றும் சமூக அறிவியலில் 4428 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.90 சதவீதமாகவும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.77 சதவீதமாகவும் உள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த காவியா ஶ்ரீயா, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்த சஞ்சனா அனுஷ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த காவிய ஜனனி ஆகிய மூன்று பெண் மாணவர்கள் 500-க்கு 499 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த மூன்று பெண் மாணவர்களும் தமிழில் மட்டும் 99 மதிப்பெண்களை எடுத்து ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.