திருப்பதியில் கோலாகலமாக நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.
உலகப் புகழ் பெற்ற திருமலை திருப்பதியில் சட்கால பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 24-ல் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழாவில் . ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கருட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 2 வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
இதில், தினமும் பிரமாண்டமான அளவில் வாகன சேவைகள் நடைபெறும். அதன்படி இரண்டாம் நாளான நேற்று (செப்.25), காலை ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப ஸ்வாமி சின்ன சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து இரவு அன்னப்பறவை (அம்ச) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து கையில் வீணை ஏந்தி மலையப்ப ஸ்வாமி எழுந்தருளினார். இதனைத் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கண்டு களித்தனர். சுவாமி புறப்பாட்டுக்கு முன் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதைத் தொடர்ந்து 3-ம் நாளான இன்று காலை, சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி திருவீதி உலா வந்தார். அப்போது திருமலையில் குவிந்திருந்த பக்தர்கள் “கோவிந்தா” முழக்கத்துடன் சுவாமியை வரவேற்று வழிபட்டனர். இதற்கு அடுத்தபடியாக இன்று இரவு, முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.