ஆன்மிகம்

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்: கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் பரவசம்!

நாளை (மே 13) வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கிறார்.

ராம் அப்பண்ணசாமி

சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று (மே 12) அதிகாலை 5.59 மணியளவில் பச்சைப் பட்டு உடுத்தியிருந்த கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

மதுரை அழகர் கோயில் பகுதியில் உள்ள திருமாலிருஞ்சோலை என்று அழைக்கப்படும் (திவ்ய தேசங்களில் ஒன்றான) கள்ளழகர் கோயிலில் கடந்த மே 8-ல் தொடங்கி சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.

சித்திரைத் திருவிழாவின் 3-ம் நாளான கடந்த மே 10 அன்று, மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வுக்காக, கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள் புறப்பட்டார்.

கோயில் ராஜகோபுர வாசலில் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நதியில் வைத்து கள்ளழகருக்கு தீபாராதனை நடந்தது. இதற்கு மறுநாள், மதுரை மாநகர் எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 4 மணியளவில் எதிர்சேவை நடந்தது.

விழாக்கோலம் பூண்டுள்ள மதுரை மாநகரில் வைத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, இரவு 8 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் கள்ளழகர் எழுந்தருளினார்.

சித்ரா பௌர்ணமி நாளான இன்று (மே 12) அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயிலில் எழுந்தருளி, பின்னர் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி வைகை ஆற்றை நோக்கிக் கள்ளழகர் புறப்பட்டார். தங்கக்குதிரை வாகனத்தில் அதிகாலை 5.45 மணிக்கு வைகை ஆற்றை வந்தடைந்தார்.

லட்சக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில், பச்சை பட்டு உடுத்தியிருந்த கள்ளழகர் வைகை ஆற்றில் 5.59 மணிக்கு எழுந்தருளினார். பக்தர்கள் `கோவிந்தா, அழகர்மலையானே’ என்று கோஷங்களை எழுப்பி கள்ளழகரை தரிசித்தனர். நாளை (மே 13) வண்டியூர் வைகை ஆற்றிலுள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் மோட்சம் அளிக்கிறார்.