உச்ச நீதிமன்றம் ANI
இந்தியா

விவிபேட் வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!

யோகேஷ் குமார்

விவிபேட் ஒப்புகைச் சீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிப்பதாகக் கூறிய நிலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

வாக்காளர் ஒருவர் வாக்களிக்கும் போது, தான் பதிவு செய்த சின்னத்தில் வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்பதை காட்டும் கருவியாக விவிபேட் இயந்திரம் அமைந்துள்ளது. இந்நிலையில் நீண்ட நாள்களாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இணைக்கப்பட்டுள்ள விவிபேடின் ஒப்புகைச் சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில் 100 சதவீத ஒப்புகைச் சீட்டுகளையும் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என ஜனநாயக சீர்திருத்த அமைப்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையில், “அனைத்து விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணும் பட்சத்தில் மனித தவறுகள், பாரபட்சம் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு எண்ணுவது சாத்தியமற்றது” என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 18 அன்று நடைபெற்ற விசாரணையில் விவிபேட் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதன் பிறகு ஒப்புகைச் சீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிப்பதாகக் கூறப்பட்டது.

மேலும், விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களுக்கு, சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளதாகவும், தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.