படம்: https://twitter.com/prakashraaj
இந்தியா

வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்தேன்: நடிகர் பிரகாஷ் ராஜ்

கிழக்கு நியூஸ்

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கேரளம், கர்நாடகம் உள்பட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூருவில் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

"என் வாக்கு, என் உரிமை. நாடாளுமன்றத்தில் எனக்கான குரலாக யார் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தை வாக்குரிமை எனக்குத் தருகிறது. நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ள வேட்பாளருக்கு ஆதரவாக நீங்கள் வாக்களிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்த்து வரும் பிரிவினைவாத, வெறுப்பு அரசியலுக்கு எதிரான மாற்றத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதியளித்துள்ள நான் நம்புகிற வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளேன்" என்றார் பிரகாஷ் ராஜ்.

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 நாடாளுமன்றத் தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தலில் 14 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.