குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் காலை 10 மணிக்குத் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்காளராக வாக்களித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெகதீப் தன்கர் ஜூலை 21-ல் அறிவித்தார். இதனால், குடியரசு துணைத் தலைவர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 9 அன்று குடியரசு துணைத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மஹாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இண்டியா கூட்டணி சார்பில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிஜு ஜனதா தளம், பாரத ராஷ்ட்ர சமிதி, ஷிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதல் வாக்காளராக வாக்களித்தார். தேர்தலில் வாக்களிப்பது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களுக்கு திங்கள்கிழமை பயிற்சியளிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தத் தேர்தலானது மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலத்தைப் பொறுத்தே தேர்தல் முடிவுகள் வரவுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மையான ஆதரவு உறுப்பினர்கள் இருப்பதால் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றியாளராக வருவதற்கே வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத்தின் மொத்த பலம் 786. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 394 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மொத்தம் 422 உறுப்பினர்கள் உள்ளார்கள்.
Vice President Election | Jagdeep Dhankar | CP Radhakrishnan | Sudershan Reddy | Sudarshan Reddy | NDA Candidate | INDIA Alliance candidate |