இந்தியா

விரைவில் கைப்பேசி எண்களுக்குக் கட்டணம்?: தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஆலோசனை!

உபயோகத்தில் இல்லாத லட்சக்கணக்கான எண்களைத் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்யாமல் இருப்பதால் புதிய எண்கள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராம் அப்பண்ணசாமி

விரைவில் இந்தியாவில் உபயோகப்படுத்தப்பட்டு வரும் கைப்பேசி எண்களுக்கு கட்டணம் செலுத்தும் நிலை உருவாகலாம். இது குறித்த ஆலோசனையில் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 119 கோடி கைப்பேசி இணைப்புகள் உள்ளன. நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் கைப்பேசி இணைப்புகள் காரணமாக புதிய எண்கள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள கைப்பேசி இணைப்புகளுக்குத் தற்போது 10 எண்கள் உபயோகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வருங்காலத்தில் பெறப்படும் புதிய கைப்பேசி இணைப்புகளுக்கு 11 எண்கள் வரை உபயோகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் உபயோகத்தில் இல்லாத லட்சக்கணக்கான எண்களைத் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ரத்து செய்யாமல் இருப்பதால் புதிய எண்கள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் ஒழுங்குமுறையைக் கொண்டு வர கைப்பேசி எண்களுக்கு ஒரு முறை கட்டணம் செலுத்தும் நடைமுறையை அமல்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வருகிறது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்.

இந்த விஷயத்தில் இறுதி முடிவெடுப்பதற்கு முன், பொது மக்கள், தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஆகியோரிடமிருந்து கருத்துகள் வரவேற்கப்படுவதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

உலகளவில் இங்கிலாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், குவைத், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் தொலைபேசி எண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.