ANI
இந்தியா

இந்திய ராணுவத் தளபதியாக பதவியேற்றார் உபேந்திர திவேதி

கடந்த 40 ஆண்டு காலமாக இந்திய ராணுவத்தின் பல பதவிகளில் பொறுப்பு வகித்துள்ள திவேதி, வடக்கு பகுதியின் ராணுவத் தளபதியாக நீண்ட காலம் பணியாற்றியவர்

ராம் அப்பண்ணசாமி

இந்திய ராணுவத்தின் தளபதியாகப் பதவி வகித்து வந்த ஜெனரல் மனோஜ் பாண்டே இன்று மதியத்துடன் ஓய்வு பெற்றதால், புதிய ராணுவத் தளபதியாக பதவியேற்றார் உபேந்திர திவேதி.

மத்திய பிரதேசத்தின் ரேவாவில் உள்ள சைனிக் பள்ளியில் படித்த உபேந்திர திவேதி, அதன் பிறகு தேசிய ராணுவக் கல்லூரியில் பயின்றுள்ளார். கடந்த 40 ஆண்டு காலமாக இந்திய ராணுவத்தின் பல பதவிகளில் பொறுப்பு வகித்துள்ள திவேதி, வடக்கு பகுதியின் ராணுவத் தளபதியாக நீண்ட காலம் பணியாற்றியவர். அப்போது சீன ராணுவத்துடன் கிழக்கு லடாக்கில் நடந்த வந்த பிரச்சனையை சமாளித்த அனுபவம் கொண்டவர் திவேதி.

ராணுவத் தளபதியாக ஒய்வு பெற்ற மனோஜ் பாண்டே ஏறத்தாழ 26 மாதங்கள் தளபதியாக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த மே 30-ல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் முடிவு பெற இருந்தபோது மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால், அவருக்கு ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தில் இந்திய ராணுவத்தை நவீனமயமாக்க பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

துணைத் தளபதியாக இருந்த உபேந்திர திவேதி தளபதியாக பதவியேற்றதால், புதிய துணைத் தளபதியாக பொறுப்பேற்கிறார் ராஜா சுப்பிரமணி.