ANI
இந்தியா

ஆகஸ்ட் 14-ல் பிரிவினை வன்முறை நினைவு தினம் அனுசரிக்கப்படும்: உ.பி. அரசு

ராம் அப்பண்ணசாமி

உத்தர பிரதேச அரசு ஆகஸ்ட் 14-ஐ பிரிவினை வன்முறை நினைவு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது.

`கடந்த வருடம் இந்திய பிரிவினையின்போது உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நடைபெற்ற நிகழ்வைப் போல, இந்த வருடம் அவர்கள் நினைவாக ஆகஸ்ட் 14-ல் பிரிவினை வன்முறை நினைவு தினம் அனுசரிக்கப்படும்’ என்று நேற்று (ஆகஸ்ட் 10) வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் உத்தர பிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங்.

`சுதந்திரத்தைப் பெற லட்சக்கணக்கான இந்தியர்கள் உயிர் நீத்தனர். நாடு இரண்டாகப் பிரிந்த நிகழ்வால் ஏற்பட்ட காயம் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பாதித்தது. அப்போது வங்கப் பிரிவினை நடைபெற்றது. அதில் கிழக்கு வங்காளம் இந்தியாவிலிருந்து பிரிந்து கிழக்கு பாகிஸ்தான் ஆனது. பிறகு 1971-ல் அது வங்கதேசம் என்ற சுதந்திர நாடானது’ என்று தலைமைச் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், `இந்திய பிரிவினை நாட்டு மக்களை பொருளாதார ரீதியில், கலாச்சார ரீதியில், சமூக ரீதியில், உளவியல் ரீதியில் பாதித்தது. பிரிவினை வன்முறை நினைவு தினம் பாகுபாடு, பகை போன்றவற்றை முடிவுக்குக் கொண்டு வர நமக்கு நினைவுபடுத்துகிறது. அது மட்டுமல்லாமல் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், மனித அதிகாரமளிப்பு போன்றவற்றைக் கடைபிடிக்க உத்வேகமளிக்கிறது’, என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 14-ஐ பிரிவினை வன்முறை நினைவு தினமாக அனுசரிக்க உ.பி.யின் 75 மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாகவும், மாவட்ட வாரியாக நடைபெறும் இந்த நிகழ்வுகளில் பிரிவினையால் இடம் பெயர்ந்த மக்களின் குடும்பத்தினர் கலந்து கொள்வதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் உ.பி.யின் தலைமைச் செயலாளர்.