2025-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கலை பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் சாகித்ய அகாடமி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கும் ஆய்வுகளுக்கும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. 1954 முதல் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில் முதன்முதலில் ரா.பி. சேதுபிள்ளை தனது தமிழ் இன்பம் படைப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
விருதாளர்களை அறிவிப்பதில் சர்ச்சை
அதன்படி 2025-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியலைத் தேர்வு குழுக்கள் பரிந்துரை செய்தன. அதனடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் 18 அன்று சாகித்ய அகாடமி தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடந்தது. அதன்பின் செய்தியாளர் சந்திப்பில் விருது பெறவுள்ள எழுத்தாளர்களின் பெயர்ப் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
மத்திய அரசு விளக்கம்
அதன்பின்னர் இது தொடர்பாக சாகித்ய அகாடமி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது, “2025-26 ஆண்டிற்காக அகாடமிகளுக்கும் அமைச்சகத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, விருதுகளை மறுசீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. அதனால் அமைச்சகத்துடன் கலந்தாலோசித்த பிறகே விருதுகள் அறிவிக்கப்படும். மறுசீரமைப்பு செயல்முறை அமைச்சகத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும் வரை, அமைச்சகத்தின் முன் அனுமதி இன்றி விருதுகளை அறிவிக்கும் எந்த செயல்முறையையும் மேற்கொள்ளக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ச. தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிப்பு
மேலும், இந்தச் சர்ச்சை எழுந்தபோதே விருதாளர்களின் பட்டியல் கசிந்தது. அதன்படி தமிழில் ‘தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலை எழுதிய எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் பெயர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று ச. தமிழ்ச்செல்வனுக்குத் தமிழின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன். சிறுகதை, கட்டுரை, சிறார் இலக்கியம் உட்பட 60-க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும் களப் பணியாளராகவும் அறியப்படும் ச. தமிழ்ச்செல்வன் இயக்குநர் சசியின் பூ படத்திற்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
The Sahitya Akademi Award for the year 2025 has been announced for S. Tamilchelvan for his book ‘Trails of Tamil Short Stories’.