ராமோஜி ராவ் காலமானார் ANI
இந்தியா

ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவ் காலமானார்

யோகேஷ் குமார்

மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், ‘ஈ நாடு’ ஊடக நிறுவனர் மற்றும் ராமோஜி குழுமத் தலைவருமான ராமோஜி ராவ் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 87.

ஹைதராபாத்தில் உள்ள பிரம்மாண்ட ராமோஜி ஃபிலிம் சிட்டியை நிறுவியவர் ராமோஜி ராவ். புஷ்பா, பாகுபலி உட்பட பல படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றுள்ளது. பத்திரிகை, திரைத்துறை, நாளிதழ், கல்வி ஆகியவற்றில் இவர் அளித்த பங்களிப்புகளுக்காக 2016-ல் இவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது.

ராமோஜி ராவ் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு அவர் உடல் நிலை மோசமடைந்த நிலையில், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உயிர் காக்கும் சிகிச்சைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ராமோஜி ராவின் உடல் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ராமோஜி ராவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார்.