அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், புதிய வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடியைச் சாடி ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய பொருள்கள் மீது 25% பரஸ்பர வரி மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதால் இந்திய பொருள்கள் மீது 25% கூடுதல் வரி என மொத்தம் 50% வரியை அமெரிக்கா விதித்திருந்தது. பின்னர் அமெரிக்கா - இந்தியா இடைக்கால வர்த்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக அந்த வரிகளை 18% ஆக அமெரிக்கா குறைத்தது.
வரி விதிப்புக்கு எதிரான வழக்கு
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த உலகளாவிய இறக்குமதி வரிகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று (பிப். 20) தீர்ப்பளித்தது. அதில், அதிபர் ட்ரம்ப், 1977-ன் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் (IEEPA) பயன்படுத்தி இறக்குமதி வரிகளை விதித்திருப்பது சட்டவிரோதமானது. நிர்வாகம் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று தீர்ப்பளித்து, வரிகளை ரத்து செய்து உத்தரவிட்டது.
புதிய வரி விதிக்கப்போகிறேன்
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மோசமானது என்று விமர்சித்துள்ள அதிபர் டிரம்ப், 1974-ன் வர்த்தகச் சட்டத்தின் கீழ் உலக நாடுகளுடன் 10% வரிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாகவும் அவரது அதிகார வரம்புக்குள் 15% வரை வரிகள் விதிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
பிரதமர் மோடியைச் சீண்டிய ராகுல்
இதற்கிடையில் இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியை ராகுல் காந்தி மீண்டும் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டதாவது: "பிரதமர் சமரசம் செய்துகொண்டுள்ளார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது. அவரால் இனி அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் அமெரிக்காவிடம் சரணடைவார்," என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். முன்னதாக நாடாளுமன்றத்தில் அமெரிக்கா - இந்தியா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து தான் பேசியதன் பின்னணியை விளக்கி நேற்று ராகுல் காந்தி காணொளி ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்த கருத்தையே அவர் மீண்டும் பதிவிட்டுள்ளார்.
Following the US Supreme Court's ruling against the global tariffs imposed by former US President Donald Trump, Rahul Gandhi, Leader of Opposition in Lok Sabha, reiterated his criticism of PM Narendra Modi regarding the India-US interim trade deal.