ரயில் விபத்துக்கு யார் பொறுப்பேற்பது?: காங்கிரஸ் கேள்வி ANI
இந்தியா

ரயில் விபத்துக்கு யார் பொறுப்பேற்பது?: காங்கிரஸ் கேள்வி

கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில் அது மோடி அரசின் தவறான நிர்வாக சீர்கேட்டைக் காட்டுகிறது.

யோகேஷ் குமார்

பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் நடைபெற்ற ரயில் விபத்துகளுக்கு யார் பொறுப்பேற்பது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் `ரங்காபானி’ என்ற இடத்தில் இன்று ரயில் விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து 15 பேர் மரணமடைந்துள்ளனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மோடி ஆட்சி காலத்தில் பல்வேறு ரயில் விபத்துகள் நடந்ததாகக் கூறி அதற்கு யார் பொறுப்பேற்பது? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி கூறியதாவது:

“மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தால் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினருக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். இச்சமயத்தில் நிவாரணம் மற்றும் தேவையான உதவிகளைச் செய்யுமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக் கொள்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ள நிலையில் அது மோடி அரசின் தவறான நிர்வாக சீர்கேட்டைக் காட்டுகிறது.

பொறுப்புள்ள எதிர்கட்சியாக, இதுபோன்ற அலட்சிய சம்பவங்கள் குறித்து நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசாங்கமே பொறுப்பு என்பதை உணர்த்துவோம்” என்றார்.