லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் உள்ளூர்வாசிகளுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான புதிய விதிமுறைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, லடாக் யூனியன் பிரதேசத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகளில் உள்ளூர்வாசிகளுக்கு 85% இட ஒதுக்கீடு வழங்கும் ஆணையை குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்டுள்ளார். மேலும், இந்த 85%-ல் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) இட ஒதுக்கீடு இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், இந்தி, உருது, போட்டி மற்றும் புர்கி ஆகியவற்றை அறிவிக்கும் வகையில், `லடாக் அதிகாரப்பூர்வ மொழிகள் ஒழுங்குமுறை ஆணையை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், யூனியன் பிரதேசத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவல்களுக்கும் முன்பு இருந்தவாறு ஆங்கிலமே பயன்படுத்தப்படும் என்று மேற்கூறிய ஆணையில் கூறப்பட்டுள்ளது. மேலும், பிற உள்ளூர் மொழிகளான ஷினா, பால்டி, லடாக்கி ஆகியவற்றை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், லடாக்கில் உள்ள இரு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான, லே மற்றும் கார்கில் மலைப்பகுதி கவுன்சில்களில் உள்ள மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் வகையிலான புதிய (திருத்த) ஒழுங்குமுறை ஆணையையும் குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ளார்.
இந்த மலைப்பகுதி கவுன்சில்களில் பெண்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் சுழற்சி, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்பட்ட வரிசை எண்ணின் அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.