சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு https://x.com/rashtrapatibhvn
இந்தியா

சபரிமலையில் குடியரசுத் தலைவர் சுவாமி தரிசனம் | Droupadi Murmu |

இருமுடி ஏந்தி 18 படிகள் ஏறிச் சென்று ஐயப்பனை வழிபட்ட திரௌபதி முர்மு...

கிழக்கு நியூஸ்

கேரள மாநிலம் சபரிமலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுடி ஏந்தி, 18 படிகள் ஏறி ஐயப்பனைத் தரிசனம் செய்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக 4 நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கேரளா சென்றுள்ளார். நேற்று (அக்.21) திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்த அவரை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதிக்குப் புறப்பட்டார்.

பின்னர் மோசமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் நிலக்கல் பகுதிக்கு பதிலாக அருகில் இருந்த பிரமாடம் உள்விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட தற்காலிக ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் தரையிறக்கப்பட்டது.

ஹெலிகாப்டரில் இருந்து குடியரசுத் தலைவர் இறங்கி காரில் ஏறிய பின்னர், புதிதாக போடப்பட்டிருந்த இறங்குதளத்தின் சிமெண்ட் தரையில் ஹெலிகாப்டரின் சக்கரங்கள் சிக்கின. இதனால் சிறிதுநேரம் அங்கு பதற்றம் நிலவியது. உடனே விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் காவலர்கள் ஹெலிகாப்டரைத் தூக்கிவிட்டனர்.

ஹெலிகாப்டர் இறங்குதளத்திலிருந்து பம்பா நதிக்குப் புறப்பட்ட குடியரசுத் தலைவர், தொடர்ந்து சபரிமலையில் 18 படிகள் ஏறி சன்னிதானத்தில் ஐயப்பனைத் தரிசித்தார். ஐப்பசி மாத பூஜையின் நிறைவு நாளான இன்று அவர் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையை முன்னிட்டு அடுத்த 2 நாள்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.