நாட்டின் மேம்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌமதி முர்மு பறந்தார்.
பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பான ரஃபேல் போர் விமானம், கடந்த 2020-ல் இந்திய விமானப் படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. முதற்கட்டமாக ஐந்து ரஃபேல் விமானங்கள் இணைக்கப்பட்ட நிலையில், தற்போது 36 விமானங்கள் உள்ளன. மேலும் 114 போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய விமானப்படை முடிவெடுத்துள்ளது. அதில் 26 ரஃபேல் விமானங்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் பயன்படுத்தப்பட உள்ளன. அதிநவீன ஏவுகணைகளைக் கொண்ட ரஃபேல் விமானம்தான், தற்போது இந்திய விமானப் படையில் உள்ள உயர் ரகப் போர் விமானம்.
குறிப்பாக பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் ரஃபேல் விமானங்கள் முக்கிய பங்காற்றின. பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்த விமானங்கள் மிகத் துல்லிய தாக்குதல் நடத்தின.
இந்நிலையில், ரஃபேல் போர் விமானத்தில் பறப்பதற்காகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு வருகை தந்தார். அவருக்கு விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், பாதுகாப்புப் படைகளின் சீருடை அணிந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணித்தார்.
ஏற்கெனவே கடந்த 2023-ல் அசாமின் தேஜ்பூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் திரௌபதி முர்மு பறந்தார். அவருக்கு முன் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்துள்ளார்கள். இதையடுத்து இந்திய பாதுகாப்புப் படைகளுடன் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் ஈடுபாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இன்று ரஃபேல் விமானத்தில் திரௌபதி முர்மு பறந்தார். இதன்மூலம் இதன்மூலம் நாட்டின் மேம்படுத்தப்பட்ட போர் விமானமான ரஃபேலில் பயணித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.
President Droupadi Murmu flew in a Rafale fighter jet wearing the uniform of the armed forces. Earlier, she had flown in a Sukhoi-30 MKI fighter jet at the Tezpur Air Force base in Assam in 2023.