ANI
இந்தியா

8 பேர் விடுதலை: கத்தார் அரசருக்கு பிரதமர் மோடி நன்றி

"இந்தியாவுக்கு வருமாறு கத்தார் அரசருக்கு பிரதமர் மோடிஅழைப்பு விடுத்தார்."

கிழக்கு நியூஸ்

இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தனிக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கத்தார் பயணம் குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் வினய் க்வாத்ரா கூறியதாவது:

"இந்திய மக்களின் நலனுக்கு ஆதரவாக இருப்பதற்கும், அல் தாரா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 8 பேரை விடுதலை செய்ததற்கும் கத்தார் அரசருக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அவர்களை இந்தியாவில் பார்ப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு கத்தார் அரசருக்கு அழைப்பு விடுத்தார்.. கத்தார் அரசரும் பிரதமர் மோடியும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பிராந்தியப் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசினார்கள்."

பிரதமர் மோடி மற்றும் கத்தார் அரசர் சந்திப்பின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தார்கள்.

இரு நாள் அரசுமுறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் சென்ற பிரதமர் மோடி பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை மாலை கத்தாரிலிருந்த புதுதில்லி புறப்பட்டார்.