நடிகர் டெல்லி கணேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.
தமிழ் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இன்று (நவ.10) அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், டெல்லி கணேஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தன் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டவை பின்வருமாறு,
`புகழ்பெற்ற திரையுலக ஆளுமை திரு டெல்லி கணேஷ் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துகிறேன். நடிப்பில் அவர் அபாரமான திறமை கொண்டவர்.
ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை ஆழமாக வெளிப்படுத்திய விதத்திற்காகவும், தலைமுறை கடந்து ரசிகர்களைக் கவர்ந்த திறமைக்காகவும் அவர் என்றென்றும் அன்போடு நினைவுகூரப்படுவார்.
நாடகத் துறையிலும் அவருக்கு ஆழமான ஈடுபாடு இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி’ என்றார்.