இந்தியா

தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப்போல இருப்பார்கள்: சாம் பித்ரோடாவின் கருத்தால் மீண்டும் சர்ச்சை

கிழக்கு நியூஸ்

இந்தியாவில் தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களைப்போல இருப்பார்கள் என அயலக காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

தி ஸ்டேட்ஸ்மேனுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

"மக்கள் ஒன்றாக வாழக்கூடிய மகிழ்ச்சியான சூழலில் 75 ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அங்கும், இங்கும் நடக்கும் சில சண்டைகளை விட்டுவிடுவோம். பலதரப்பட்ட இந்தியாவை ஒரு நாடாக ஒன்றிணைத்து வைத்திருக்க முடியும். அங்கு கிழக்கில் இருப்பவர்கள் சீனர்களைப்போல இருப்பார்கள், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போல இருப்பார்கள். வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப்போல இருப்பார்கள். தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப்போல இருப்பார்கள்.

இந்திய மக்கள் வெவ்வேறு மொழிகள், மதம், உணவுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள். அந்த இந்தியாவில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அங்கு அனைவருக்கும் இடம் உண்டு. அனைவரும் சற்று சமரசமும் செய்து கொள்கிறார்கள்" என்றார் பித்ரோடா.

நாட்டின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சீனர்கள், ஆப்பிரிக்கர்கள், அரேபியர்களைப்போல இருப்பதாக அவர் பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கெனவே வாரிசுரிமை வரி குறித்து இவர் பேசியது சர்ச்சையானது.