பாஜகவைச் சேர்ந்த பெமா காண்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அம்மாநிலத் தலைநகர் இடாநகரில் காண்டுவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் கெ.டி.பர்நாயக்.
நடந்து முடிந்த 18-வது மக்களவைத் தேர்தலுடன், 70 இடங்களைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடைபெற்றது. ஜுன் 2-ல் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைத்தன. தேர்தலுக்கு முன்பே பாஜகவைச் சேர்ந்த 10 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்தெடுக்கப்பட்டனர்.
44-வயதான பெமா காண்டு 2016-ல் முதல்முறையாக அருணாச்சலப் பிரதேச முதல்வராகப் பதவியேற்றார். பெமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டு 2007 முதல் 2011 வரை அருணாச்சலப் பிரதேச முதல்வராகப் பணியாற்றியுள்ளார். 2011 ஏப்ரல் 30-ல் டோர்ஜி காண்டு பயணித்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த அனைவரும் மரணமடைந்தனர்.
தந்தையின் மரணத்துக்குப் பிறகு அரசியலில் நுழைந்த பெமா காண்டு, அவரது தொகுதியான முக்டோவில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதற்குப் பிறகு தொடர்ந்து 4-வது முறையாக இந்த தேர்தலில் முக்டோ தொகுதியில் இருந்து தேர்தெடுக்கப்பட்டுள்ளார் பெமா காண்டு.
18-வது மக்களவைத் தேர்தலில் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் இரண்டு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற நபர்களில் ஒருவரான கிரண் ரிஜிஜூ மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சராக உள்ளார்.