இந்தியா

வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

60 ஆண்டுகளுக்குப் பிறகு 3-வது முறையாக நமது அரசு தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது

ராம் அப்பண்ணசாமி

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மாநிலங்களவையில் பதிலுரை வழங்கி வருகிறார் பிரதமர் மோடி. அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:

60 ஆண்டுகளுக்குப் பிறகு 3-வது முறையாக நமது அரசு தொடர்ந்து ஆட்சியமைத்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை நம்பி மூன்றாவது முறையாக மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய முயற்சி நடக்கிறது.

எங்களுக்கு கிடைத்த வெற்றி மக்களுக்கான சிறந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும். மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றியால் இந்திய பொருளாதாரம் உலகளவில் மூன்றாம் இடத்துக்குச் செல்லும்.

அரசமைப்பு நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்புச் சட்டம் கலங்கரை விளக்கம் போல உதவும்.  

கொரோனா பெருந்தொற்று கால சவால்களை கடந்து இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது. 5 ஆண்டுகளில் வறுமையை ஒழிக்க மத்திய அரசு போராடும். மாநகர, பெருநகர வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி அளிக்கப்பட்டது. ஆனால் சிறு விவசாயிகள் அந்தத் திட்டத்தால் பயனடையவில்லை, என்றார்.

மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பொய் சொல்வதை நிறுத்துங்கள் எனக் கோஷமிட்டு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பிறகு வெளிநடப்பு செய்தன. நேற்று 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்களவையில் பதிலுரை வழங்கினார் மோடி.