நாடாளுமன்ற வளாகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தில் ஜூலை 21 - ஆகஸ்ட் 21 வரையிலான மழைக்கால கூட்டத் தொடருக்குப் பிறகு குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (டிச. 1) தொடங்கியது. டிசம்பர் 19 வரை நடைபெறவுள்ள ஆண்டின் குறுகிய கால கூட்டத்தொடரில், அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா -2025 உட்பட 14 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆனால், நேற்று தொடங்கியது முதலே, எதிர்க்கட்சிகள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக முழக்கமிட்டு வருகின்றனர். மேலும், நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் நேற்று பலமுறை நாடாளுமன்ற அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னர், வளாகத்தின் வாசலில் திரண்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி, முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். அதில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “அநீதிக்கு எதிராக போராடி ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து வாக்குத்திருட்டு விவகாரம் குறித்தும் சிறப்பு தீவிர திருத்தம் குறித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் நாடாளுமன்ற மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
Congress and other opposition MPs staged a protest against the ongoing Special Intensive Revision (SIR) of the electoral roll as the Parliament gears up for the second day of the Winter Session.