ANI
இந்தியா

தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக பிரதமர் மோடி தேர்வு

கிழக்கு நியூஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணித் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும் வென்றுள்ளன. ஆட்சியமைப்பதற்காக தனிப் பெரும்பான்மையைப் பெறாததால், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பாஜக அமைக்கிறது. இதுதொடர்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் தில்லியிலுள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் இன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பாஜக தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யான், லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பிரஃபுல் படேல் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.