மோடி, ராகுல்: பொங்கலில் தமிழ்நாட்டைக் குறிவைக்கும் தேசிய தலைவர்கள் 
இந்தியா

மோடி, ராகுல்: பொங்கலில் தமிழ்நாட்டைக் குறிவைக்கும் தேசிய தலைவர்கள் | Pongal Celebrations |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய கட்சிகளின் கவனம் தமிழ்நாட்டின் மீது குவிந்திருப்பது....

கிழக்கு நியூஸ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டைக் குறிவைத்து தேசிய தலைவர்கள் கொண்டாட்டங்களை மேற்கொள்ளவுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் அன்புமணி தரப்பு பாமகவும் இணைந்துள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் விரைவில் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு முழுமையாகத் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டைக் குறிவைக்கும் தேசிய தலைவர்கள்

இதற்கிடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேசிய கட்சிகளின் கவனம் தமிழ்நாட்டின் மீது குவிந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முக்கிய தலைவருமான ராகுல் காந்தியின் தமிழ்நாடு வருகையும், பாஜகவின் முக்கிய தலைவரும் பிரதமருமான மோடியின் பொங்கல் கொண்டாட்டமும் கவனம் பெற்றுள்ளது.

ராகுல் காந்தி தமிழ்நாடு வருகை

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, நாளை (ஜன. 13) அன்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார். அவர் அப்போது பள்ளி மாணவர்களுடன் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காக பிரமாண்ட ஏற்பாடுகளை காங்கிரஸ் செய்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் பொங்கல் கொண்டாட்டம்

மறுபுறம், தில்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் இல்லத்தில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போதும் தமிழ் பாரம்பரிய உடையணிந்து எல். முருகன் வீட்டில் பிரதமர் மோடி பொங்கல் கொண்டாடினார். அதையே இந்த ஆண்டும் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவ்வாண்டு பொங்கல் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதகிருஷ்ணனும் பங்கேற்க உள்ளதாக தெரிய வருகிறது.

அமித் ஷா பங்கேற்ற பொங்கல் விழா

இதற்கிடையில் கடந்த ஜனவரி 5 அன்று மத்திய உள்துறை அமைச்சர் திருச்சியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்ட பொங்கல் நிகழ்ச்சியான ‘நம்ம ஊரு பொங்கல்’ விழாவில் பங்கேற்று பொங்கல் கொண்டாடினார். அந்த நிகழ்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்த, தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக தேசிய தலைவர்கள் முனைவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

The announcement that national leaders will be holding celebrations targeting Tamil Nadu on the occasion of the Pongal festival has become a topic of discussion in the political arena.