மும்பை விளம்பரப்பலகை விபத்து ANI
இந்தியா

மும்பை விளம்பரப்பலகை விபத்து: 14 பேர் உயிரிழப்பு

யோகேஷ் குமார்

மும்பையில் புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக விளம்பரப்பலகை சரிந்து விழுந்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மும்பையில் நேற்று ஏற்பட்ட புழுதிப் புயலின் தாக்கத்தின் காரணமாக காட்கோபர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றுக்கு எதிராக இருந்த சுமார் 100 அடிக்கும் மேலான விளம்பரப்பலகை பெட்ரோல் பங்க் மீது சரிந்தது. அந்த பகுதியில் இருந்த ஏராளமான மக்கள் இதில் சிக்கினர்.

இதைத் தொடர்ந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக, விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரடியாக சென்று பார்வையிட்ட மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்தார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.