20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மோட்டார் வாகனங்களுக்கான பதிவு புதுப்பித்தல் கட்டணத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) உயர்த்தியுள்ளது. பழைய வாகனங்களைப் பொதுமக்கள் பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக கூறப்படுகிறது.
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (LMV) புதுப்பித்தல் கட்டணம் ரூ. 5,000-ல் இருந்து ரூ. 10,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
அதேபோல 20 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் சைக்கிள்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் குவாட்ரிசைக்கிள்களுக்கான புதுப்பித்தல் கட்டணம் ரூ. 3,500-ல் இருந்து ரூ. 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு அல்லது மூன்று சக்கர மோட்டார் வாகனங்களைப் பொறுத்தவரை, பதிவுச் சான்றிதழைப் புதுப்பிப்பதற்கான கட்டணம் ரூ. 20,000 ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட சக்கரங்களைக் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு, புதுப்பித்தல் கட்டணம் ரூ. 80,000 ஆக இருக்கும்.
கட்டணங்களை உயர்த்துவதற்கான வரைவு திருத்தம் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 21 அன்று இறுதி செய்யப்பட்டது.
நடப்பு மாதத்தின் தொடக்கத்தில், தில்லி-என்.சி.ஆரில் இயக்கப்படும் 10 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வாகனங்களுக்கான ஆயுள் காலம் முடிவு (end of life policy) கொள்கையை அமல்படுத்தும்போது, வாகனங்களின் உற்பத்தி ஆண்டை மட்டும் கருத்தில் கொள்ளாமல், உண்மையான பயன்பாட்டுக் காலத்தை கருத்தில் கொள்ளுமாறு தில்லி அரசு நீதிமன்றத்தை வலியுறுத்தியதை அடுத்து இத்தகைய உத்தரவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.