அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பரப்புரையில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், பென்னிசில்வேனியாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார். அப்போது திடீரென டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில் டிரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாதுகாவலர்களின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறினார் டிரம்ப். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர், துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இதன்பிறகு, துப்பாக்கியால் சுட்ட நபரைச் சுட்டுக் கொன்றது சிறப்புப் பாதுகாப்புப் படை.
இந்நிலையில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “எனது நண்பரும், முன்னாள் அதிபருமான டிரம்ப் மீதான தாக்குதல் கவலை அளிக்கிறது. இச்சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.