இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் சுவர் இடிந்து விழுந்து 9 சிறார்கள் உயிரிழப்பு

கிழக்கு நியூஸ்

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 சிறார்கள் உயிரிழந்துள்ளன.

மேலும் இருவர் தீவிரக் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஹர்தயால் கோயிலில் மத வழிபாட்டுக்காக அனைவரும் கூடியிருக்கிறார்கள். அப்போது கோயிலுக்கு அருகிலிருந்த வீட்டின் சுவர் இடிந்து இவர்கள் மீது விழுந்துள்ளது. இந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 10 முதல் 15 வயதைச் சேர்ந்தவர்கள்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நேற்றிரவு கனமழை பெய்ததால் காலை 8.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்றார்கள்.

இந்தச் சம்பவம் வேதனையளிப்பதாகத் தெரிவித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். சுவர் இடிந்து விழுந்த வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.