கேரள உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 9, 11 ஆகிய நாள்களில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 21 வரை வேட்புமனுத் தாக்கல் செய்யலாம். நவம்பர் 22 அன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுவைத் திரும்பப் பெற நவம்பர் 24 கடைசி நாள். 1,119 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 23,576 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு டிசம்பர் 9 அன்று தேர்தல் நடைபெறுகிறது. திரிச்சூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், கோழிக்கோட்டில் கண்ணூர் மற்றும் காசர்கோட்டில் டிசம்பர் 11 அன்று தேர்தல் நடைபெறுகிறது.
டிசம்பர் 13 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. டிசம்பர் 18-க்குள் அனைத்துத் தேர்தல் பணிகளும் நிறைவடைகிறது.
கேரளத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானத் தேர்தலாகக் கருதப்படுகிறது.
2020 உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 14 மாவட்டப் பஞ்சாயத்துகள். இவற்றில் 11 மாவட்டப் பஞ்சாயத்துகளில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது இடது ஜனநாயக முன்னணி 40.2 சதவீத வாக்குகளையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி 37.9 சதவீத வாக்குகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 15 சதவீத வாக்குகளையும் பெற்றன.
Kerala | Kerala Local Body Election | Kerala Election | UDF | LDF |