எல்.ஐ.சி நிறுவனத்தில் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு செப்டம்பர் 22-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, தனது பொன்விழா ஆண்டை முன்னிட்டு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் உயர்கல்வியை தொடரும் வகையில், கல்வித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு வருகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில் - “அரசு, தனியார் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐடிஐ தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் இதில் விண்ணப்பிக்கலாம். பொதுக்கல்வி மற்றும் பெண்களுக்கான சிறப்புக் கல்வித் தொகை என இரு வகையான கல்வித்தொகை வழங்கப்படுகிறது. 2022 முதல் 2025 வரையிலான கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, இந்த கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோவில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ரூ. 4.50 லட்சத்தை கடந்திருக்கக்கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கல்வித் தொகையில், ”மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு இரு தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 40,000 வழங்கப்படும். பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு இரு தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 30,000 வழங்கப்படும். பட்டப்படிப்பு, டிப்ளமோ உள்ளிட்ட இதர படிப்புகளில் இணைந்துள்ள மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 20,000 வழங்கப்படும். பெண்களுக்கு, சிறப்பு கல்வி உதவித்தொகைக்குக் கீழ் ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கப்படும். மாணவர்களின் வங்கி கணக்குகளுக்கு நேரடியாக பணம் செலுத்தப்படும். மாணவர்களின் கல்வி முடியும் வரை முழுமையாக உதவித்தொகை அளிக்கப்படும். பெண்களுக்கு சிறப்பு உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்” என்றும் கூறப்படுகிறது.
”2025-26 கல்வி ஆண்டிற்கான எல்.ஐ.சி பொன்விழா ஆண்டு கல்வித் தொகையைப் பெற, https://licindia.in/golden-jubilee-foundation என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை, அதிலேயே பதிவேற்றம் செய்து கொள்ளலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
LIC | Scholarship | LIC Golden Jubilee Year Scholarship |